அத்தியாயம் - 18
சொல்லச் சொல்லக்
கேட்காமல் தனது திருமண விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும் அன்னையை முறைத்துக் கொண்டு
நின்றிருந்தாள் திவ்யா.
“நீ சரின்னு
சொன்னா மாமிகிட்ட சொல்லி அவங்களை வரச் சொல்லிப் பேசலாம். மாப்பிள்ளையைப்
பாரு… பேசணுமா பேசு… உனக்கு முழு சம்மதம்னா
மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். என்ன சொல்ற?”
ஆவலும் எதிர்பார்ப்புமாகக்
கேட்ட அன்னையை, ஒன்றும்
சொல்வதற்கு இல்லை என்பது போல பார்த்தவள், கோட்டை எடுத்து தோளில்
போட்டுக் கொண்டு ஸ்கூட்டி சாவியை எடுத்தாள்.
“திவி!
உன்னைத் தானே கேட்கறேன்… அவங்களுக்கு என்ன பதில்
சொல்லட்டும்…?”
வேகமாக மூச்சை
விட்டவள், சலிப்புடன் அவரைப் பார்த்தாள்.
“ஏம்மா என்னை
இப்படிப் படுத்தற? எனக்குக் கல்யாணம் செய்துவைன்னு நான் கேட்டேனா?”
என்று சிடுசிடுத்தாள்.
“உனக்கு இருபத்தி
நாலு வயசாகுது திவி! இன்னும்…”
“போதும்மா…
இருபத்தி நாலு வயசானா கல்யாணம் செய்துக்கணும்னு கட்டாயமா என்ன?”
எரிச்சலுடன் சொன்னவள், “ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்மா!
எங்க அப்பா மாதிரி ஒரு ஆளைக் கல்யாணம் செய்துகிட்டு இத்தனை வருஷம் அவஸ்தைப்
பட்டும், உன் பொண்ணுக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்னு நினைக்கிற
பாரு… நீ ரொம்ப கிரேட்!”
கிண்டலாகச்
சொன்ன மகளை ஆழ்ந்த பார்வை பார்த்தார்.
“எல்லோருமே
கெட்டவங்க இல்லை திவிம்மா! நல்லவங்களும் இருக்காங்க.”
“நானும் எல்லோரும்
அப்படின்னு சொல்லலை. ஊர்ல நிறைய பேர் அப்படித்தான் இருக்கானுங்க…”
தேவையில்லாமல் ஸ்ரீ ராமின் முகம் நினைவில் வர, வாய்க்குள்ளேயே ஏதோ முனகினாள்.
“இருக்கட்டுமே…
ஆனா, இந்தப் பையனைப் பார்த்தா ரொம்ப டீசண்டா,
பொறுப்பானவனா தெரியறான். கோயில்ல பார்த்தோமில்ல
அந்த மாமி…” சொல்லிக் கொண்டே சென்ற வைதேகி, திவ்யாவின் முறைப்பில் அப்படியே அடங்கிப் போனார்.
“எந்த மாமி?
நீ என்ன எனக்கு ஒரு மாமியையா அறிமுகப்படுத்தி வச்சிருக்க? கிட்டத்தட்ட ரெண்டு மாசமாச்சு இந்த ஊருக்கு வந்து… வேலைக்குப்
போற எனக்கே அவ்வளவா யாரையும் தெரியல. ஆனா, உனக்கு வீட்டுப் படியை விட்டு இறங்கினா, தெருவெல்லாம்
ஃப்ரெண்ட்ஸ்… அதோட இப்பல்லாம் டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு வர்றவனுங்க
தான் ஒண்ணாம் நம்பர் ஃப்ராடா இருக்கானுங்க…” இலகுவாக ஆரம்பித்து,
கடுப்புடன் முடித்தாள்.
வைதேகிக்கு
போதும் போதும் என்றிருந்தது. “இப்போ கடைசியா என்னதான் சொல்ற?”
“என்னைக்
கொஞ்ச நாளைக்கு, நிம்மதியா இருக்கவிடுன்னு சொல்றேன். டியூட்டிக்கு நேரமாச்சு கிளம்பறேன்” என்ற மகளை ஆயாசத்துடன்
பார்த்தார் வைதேகி.
*************
அமைதியாக நின்றிருந்த
மனைவியின் கண்களில் தெரிந்த தவிப்பை கவனித்த பிரபுவிற்கு தனது இதயத்தை யாரோ கசக்கிப்
பிழிவதைப் போன்ற வேதனையை ஏற்படுத்தியது.
அவளை ஆறுதலாக
அணைத்துக் கொள்ள கைகள் பரபரத்தன. ஆனால், ‘நீ சொல்லப் போவதை கேட்ட பின்பு, அவள் துடிப்பாளே அப்போது என்ன சொல்லி தேற்றுவாய்?’ என்று
மனத்தை நச்சரித்த கேள்விக்கு அவனால் எந்த சமாதானமும் சொல்ல முடியவில்லை.
அவளது கண்களைப்
பார்த்துப் பேசும் துணிவில்லாமல், சுவற்றை பார்த்தபடி திரும்பி நின்று கொண்டான்.
“உனக்கு ஜோ…ஷிதாவை நினைவிருக்கா?”
“ஆமா,
அன்னைக்கு ஹோட்டல்ல…”
“அவளேதான்…”
என்றவன் தலையை அழுந்த கோதியபடி இருக்கையில் அமர்ந்தான்.
மனத்திலிருப்பதைச்
சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்து வந்தவனால் அதைச் சொல்லவே முடியவில்லை.
தலைகுனிந்து
அவன் அமர்ந்திருந்த நிலையைக் காணவே முடியவில்லை சஹானாவால்.
‘அவளைப் பற்றி
என்ன சொல்ல வந்தார்? ஒருவேளை அவளைக் காதலித்தாரா? அத்தையோட வற்புறுத்தலால, என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னாரா?’
நிமிடத்தில் அவளுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக கேள்விகள் வரிசைக் கட்டி வந்தன.
‘அதனால் தான்
அன்று அவள் என்னை அத்தனை முறை மிசஸ்.பிரபு என்று அழைத்தாளா?’
பிரபுவும் அவளைக் கண்டதும் சற்று வித்தியாசமாக வெட்டுவது போலவே பேசியதும்
நினைவிற்கு வந்தது.
அதற்கு மேல்
அவளால் அந்த நினைவைத் தொடர முடியவில்லை. ‘பிரபுவிற்கு ஒரு காதலி’ என்ற விஷயத்தை
ஜீரணிக்க, அவளுக்குச் சிரமமாக இருந்தது. நிற்க முடியாமல் கால்கள் தள்ளாட, பொத்தென கட்டிலில் அமர்ந்தாள்.
‘திருமணமான
புதிதில் அவன் தன்னிடமிருந்து சற்று விலகி இருந்தது இதனால் தானா? ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னிடம் ஓரளவு நன்றாகவே
பழகினானே! ஒருவேளை, மணந்து கொண்டவளை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தினாலா?’
அவளுக்கு அழுகை
வரும் போலிருந்தது. ‘தனக்கு முன்னால் பிரபுவின் இதயத்தில் ஒருத்தி இருந்தாள்’ என்ற விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.
கணவனது மனத்தில்
தான் நீங்கா இடம் பெற்றிருக்கிறோம் என்ற மமதையில் இருந்தவளுக்கு, இது பெரிய அடியாக இருந்தது.
நிமிர்ந்து
பிரபுவைப் பார்த்தாள். அவன் இன்னும் அதே நிலையிலேயே அமர்ந்திருந்தான்.
கண்களைத் துடைத்துக்
கொண்டு அவள் எழவும், பிரபுவின் செல்போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
கட்டிலின் அருகிலேயே
இருந்ததால் எடுத்தவள், அதில் தேவியின் பெயர் ஒளிரவும் ஆன் செய்து காதில் வைத்தாள்.
“சொல்லு தேவி
என்ன இந்த நேரத்தில் போன்…?”
அந்தக் கேள்வியை
முழுதாக கேட்கும் முன்பே தேவியின் அழுகுரல் கேட்க பதறிப் போனாள்.
“தேவி!
ஏன் அழற?”
அவ்வளவு நேரம்
குற்றஉணர்வில் தவித்துக் கொண்டிருந்த பிரபு தங்கையின் பெயரைச் சொல்லிப் பேசியதும் வேகமாக
எழுந்து வந்து போனை வாங்கினான்.
“தேவிம்மா!
என்னடா?”
இதுவரை தேக்கி
வைத்திருந்த பாசமெல்லாம் அவனது குரலில் வழிந்தோடியது.
“……………..”
“எப்போ?
எப்படி? கணவனது முகமாறுதல்களைக் கவனித்துக் கொண்டிருந்த
சஹானா பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவனது புஜத்தை
இறுகப் பிடித்துக் கொண்டவள், “என்னாச்சு பிரபு?” என்றாள் பயத்துடன்.
அவளது கரத்தை
ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தவன், “நாங்க உடனே கிளம்பி வரோம்…” என்று போனை அணைத்தவன்,
“சஹி! நாம உடனே கிளம்பணும்…” சொல்லிக் கொண்டே அறையில் ஆங்காங்கே இருந்த தங்களது பொருட்களை விரைந்து சேகரித்தான்.
பயத்தில் அடிவயிறு
கலங்க, “யாருக்கு என்ன பிரபு?” என்று கண்ணீருடன் கேட்டாள்.
“அண்ணி மாடிப்படியில
உருண்டு விழுந்துட்டாங்களாம்… ஹாஸ்பிட்டல்ல அட்மிட்
பண்ணியிருக்காங்க…”
என்றதும் துடித்துப் போனாள் அவள்.
“பயப்பட ஒண்ணுமில்லடா!”
ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான் பிரபு.
*************
மருத்துவமனை
வராண்டாவில் கணேசன் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்க, பரிமளத்தின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தார்
சுகுணா.
“நாம யாருக்கும்
எந்தக் கெடுதலும் செய்யல சுகுணா… அவளுக்கு எதுவும் ஆகாது…”
தேற்றிக் கொண்டிருந்த பரிமளத்தின் கண்களும் கசிந்து கொண்டிருந்தன.
இவற்றையெல்லாம்
பார்த்தபடி இறுக்கமான முகத்துடன் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் ஸ்ரீ ராம்.
அவசரமாக வெளியே
வந்த நர்ஸ், “சார்!
இந்த மெடிசன்ஸ் வேணும்… சீக்கிரம் வாங்கிட்டு வாங்க
என்று பிரிஸ்கிரிப்ஷனை நீட்டினார்.
வெடுக்கென அதைப்
பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்ட ஸ்ரீ ராம், ஓட்டமும் நடையுமாக அந்த வராண்டாவில் திரும்பியவன், எதிரில் வந்த டியூட்டி டாக்டரின் மீது மோதிக் கொண்டான்.
அவனுக்கிருந்த
அவசரத்தில், “சாரி டாக்டர்!”
என்றவன், திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
ஆனால், தன் மீது மோதியவனை, திவ்யா அடையாளம் கண்டுகொண்டாள்.
“இவன் எங்கே
இங்கே வந்தான்? ஹாஸ்பிட்டலுக்கு வந்தாலும் என் மேலயே இடிச்சிட்டுப்
போகணும்னு வேண்டுதல் போல இவனுக்கு…”
முணுமுணுத்துக்
கொண்டே வலித்த தோள்பட்டையை தடவியபடி அவனைப் பின்தொடர்ந்தவள், அவன் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாகச் செல்வதைப்
பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய் திவி!
ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்னு வெளியே வந்து தெருவை வேடிக்கைப் பார்த்துட்டு
இருக்க என்ன விஷயம்?” என்று கேட்டாள் அவளது தோழி கல்பனா.
“ம்,
அந்த ரோமியோ வந்திருந்தான்…” என்றாள் சலிப்புடன்.
“இந்த ஜுலியட்டைத்
தேடியா?” – கல்பனா.
சிரித்துக்
கொண்டே கேட்ட தோழியின் கையை நறுக்கென கிள்ளினாள்.
“நீ சொன்னதுக்குத்
தானே கிண்டல் பண்ணேன். அதுக்கு இப்படியா கிள்ளுவ? யாருடி அந்த ரோமியோ?” கையைத் தடவிக் கொண்டே கேட்டாள்.
“அதான் அந்த
ஹெச்.ஆர் மேனேஜர் ஸ்ரீ ராம்…” என்றாள் கோபத்துடன்.
“பார்த்துடி
பல்லு சுளுக்கிக்கப் போகுது. கோபம் வார்த்தைல மட்டும் தான் தெரியுது.
மத்தபடி…” என்றவளை பற்களைக் கடித்துக் கொண்டு பார்த்துவிட்டு,
விறுவிறுவென முன்னால் நடந்தாள் திவ்யா.
“எதுக்குடி
கோச்சிக்கிற… எனக்குத் தோணினதைச் சொன்னேன். அவரை ரெண்டு முறை பார்த்துப் பேசின எனக்கே, அவரோட பேர்
நினைவில்ல. நீ ஒரே ஒரு முறை தான் பார்த்த… அதுவும் சண்டையோட பாதியில் எழுந்து வந்துட்ட. ஆனாலும்,
அவரோட பேரை மறக்காம ஞாபகம் வச்சிருக்கயே… அதான்
சொன்னேன்…”
மேலோட்டமாக
கல்பனா அவளுக்கு விளக்கம் சொல்வது போலிருந்தாலும், முழுக்க முழுக்க அதில் கேலிதான் தெரிந்தது.
“ம்,
சின்ன வயசுல எங்கம்மா எனக்கு நிறைய வல்லாரை கீரை கொடுத்தாங்க அதான்…”
எரிச்சலுடன் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.
“அப்படியே
கொஞ்சம் காரத்தை சாப்பாட்டில் கம்மி பண்ணி கொடுத்திருக்கலாம்… இத்தனைக் கோபம் உடம்புக்கு நல்லதில்ல…”
”போதும்…
கொஞ்சம் அடங்கு” என்றவள் டேபிள் மீதிருந்த பேஷண்டின்
கேஸ் ஃபைலை எடுத்துப் புரட்டினாள்.
ஆனால், மனம் அதில் சற்றும் லயிக்கவில்லை.
‘அத்தனை அவசரமாகச் சென்றானே, யாருக்கு என்ன?’ என்று அவளது மனம் கேள்வி
கேட்டுக் கொண்டிருந்தது.
அவளது முகத்தையே
பார்த்துக் கொண்டிருந்தாள் கல்பனா.
“நீதான் திவி
அவரைத் தப்பா நினைச்சிட்டு இருக்க. அவர்கூட பேசின வரைக்கும் ரொம்ப
கண்ணியமா தான் நடந்துகிட்டார். கோணல் புத்தி இருக்கறவனா இருந்தா,
ஒரு நேரமில்லனாலும் ஒருநேரம் அவன் கண்ணே காட்டிக் கொடுத்திடும்.
என்னைப் பொறுத்த வரைக்கும் ஸ்ரீராம் சார் ஜெம்!” என்று மென்குரலில் எடுத்துச் சொன்னாள் கல்பனா.
திவ்யா இதற்கு
பதிலே சொல்லவில்லை.
*********
அடுத்த இரண்டு
மணி நேரத்தை கலக்கமும், வேண்டுதலுமாக அவர்கள் நகர்த்திக் கொண்டிருக்க, ஒரு வழியாக
சீஃப் டாக்டர் வர்ஷா இருந்த அறையிலிருந்து வெளியே வந்தார்.
அழுதுச் சிவந்திருந்த
சுகுணாவின் முகத்தைப் பார்த்தவர், ஆறுதலுடன் புன்னகைத்தார்.
“நத்திங்
டூ வொர்ரி. அம்மாவும், வயத்துல இருக்கற
பேபியும் நல்லா இருக்காங்க. விழுந்த அதிர்ச்சியில யூட்ரஸ் ஓபன்
ஆகிடுச்சி. ஆனா, இப்போ குழந்தை பிறந்தா
ப்ரீ மெச்சூராக இருக்கும். அப்புறம் ரொம்பச் சிரமம்.
அதனால பெயின்
வரக்கூடாது… அதுக்கு
மெடிசின் கொடுத்திருக்கோம். ஒரு வாரத்துக்காவது அவங்க ஹாஸ்பிட்டல்ல
இருந்தே ஆகணும். மத்தபடி எல்லாம் ஓகே… போய்ப்
பாருங்க…”
அனைவரும் நிம்மதியுடன்
டாக்டருக்கு நன்றி கூறிக் கொண்டிருந்த அதேநேரம், பிரபுவும், சஹானாவும் வேகமாக அந்த அறையை
நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment